இந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆண்டு வரலாற்றில் முதல் சாதனை!!
டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இன்று ( 6ம் தேதி ) இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 393 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 726 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் ஆட்ட துவக்கம் முதலே சரிய துவங்கின.
இறுதியாக இலங்கை தனது 2வது இன்னிங்சில் 309 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சங்ககரா 137 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது.
ஆட்ட நாயகனாக சேவாக் : அதிகமாக ரன்குவித்த சேவாக் ( 293 ரன்கள் ) ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முத்தையா முரளிதரனுக்கு பந்துவீச்சாளர் விருது வழங்கப்பட்டது. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக சேவாக்-டிராவிட் ஜோடி தேர்வு செய்யப்பட்டது.












0 பின்னூட்டங்கள்